வெளிநாடு செல்பவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுரை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , தமிழ் நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை சமூக வலைதளம் மூலமாக மூளைச் சலவை செய்து கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டிலுள்ள IT நிறுவனங்களில் அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் துன்புறுத்தப்படுவதாவும் அரசின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளதால் இதுகுறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், இந்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? போன்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டு செல்லவும் அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் "அயலகத் தமிழர் நலத்துறை" அல்லது குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டு செல்லவேண்டும்.
இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்களை www.emigrate.gov.in இணையதளத்திலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண். 90421 49222 மற்றும் [email protected], [email protected] – என்ற மின்னஞ்சல் மூலம் விளக்கங்கள் பெறலாம். மேலும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மையத்தின் 18003093793, 8069009901 மற்றும் 8069009900 (Missed Call Number) என்ற தொடர்பு எண்களை பயன்படுத்திக்கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
