பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசு மருத்துவர்கள் சாதனை!
தூத்துக்குடி டி எம் பி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ,சுமதி தேவிகா தம்பதியின் 7 வயது மகள் செல்வ ஸ்ரீஜா. செல்வ ஸ்ரீஜா பிறக்கும்போதே அவரது வலது கையில் மூன்றாவது மற்றும் நான்காவது விரல்கள் ஒட்டி இருந்தது.
இதன் காரணமாக விரல்கள் வளர்ச்சி அடைய அடைய செல்வ ஸ்ரீஜா விற்கு சாப்பிடுவதற்கு மற்றும் எழுதுவதற்கு கடினமாக இருந்தது. இதைத்தொடர்ந்து கூலித்தொழிலாளியான சுரேஷ் தனது மகளின் கைவிரலை சரி செய்ய பணம் இல்லாத காரணத்தினால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவை நாடி உள்ளார். இதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவில் பணிபுரிந்து வரும் டாக்டர் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவர்கள் சிறுமி ஸ்ரீஜாவை தொடர் சோதனை செய்து ரத்த நாளங்கள் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கடந்த 2022 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் இரண்டு விரல்களையும் தனித்தனியாக பிரித்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தற்போது 1ஆம் வகுப்பு படித்து வரும் செல்வ ஸ்ரீஜா சாதாரணமாக மற்ற குழந்தைகளுக்கு விரல்கள் செயல்படுவது போல் விரல்கள் இயக்கம் செயல்படுவதால் எழுதுவது சாப்பிடுவது போன்ற பணிகளை எளிதாக செய்து வருகிறார். இந்த சாதனையை புரிந்த மருத்துவக் குழுவை மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் பாராட்டினர். இவ்வாறு கைவிரல் ஒட்டி பிறப்பது சுமார் 4000 முதல் ஐந்தாயிரம் குழந்தைகள் பிறப்பில் ஒரு குழந்தைக்கு இவ்வாறு வருகிறது.
இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முதலிலேயே அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி துறை மூலம் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.