குடும்ப தகராற்றால் பெண் தற்கொலை - மகளை காப்பாற்றிய ஊர் மக்கள்

குடும்ப தகராற்றால் பெண் தற்கொலை
சேலம் மாவட்டம் வீராணம் அடுத்த சுக்கம்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 35). இவருக்கும், மேட்டூரை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹேமப்பிரியா (14), தேவதர்ஷினி (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி தனது குழந்தைகளுடன் சுக்கம்பட்டியில் தாய் வீட்டின் அருகே தனியாக வசித்து வந்தார். மேலும் அவர் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மருந்து கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஸ்வரி தனது 2 மகள்களையும் வீட்டின் அருகே உள்ள கிணற்று பகுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் 2 மகள்களுடன் கிணற்றில் குதிக்க முயன்றார். அப்போது தேவதர்ஷினி கிணற்றில் குதிக்காமல் மேல் பகுதியில் நின்று கொண்டார். இதனால் மகேஸ்வரியும், மூத்த மகள் ஹேமப்பிரியாவும் கிணற்றில் குதித்துவிட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவதர்ஷினி, அம்மாஅம்மா, என்று சத்தம் போட்டு கூச்சலிட்டார். சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கிணற்று பகுதிக்கு சென்றனர். அப்போது கிணற்றில் அம்மாவும், அக்காளும் குதித்துவிட்டதாக தேவதர்ஷினி அழுதவாறு கூறினார். கிணற்றில் வயரை பிடித்து தொங்கி கொண்டுரிந்த ஹேமப்பிரியாவை மீட்டனர். மகேஸ்வரி தண்ணீரில் மூழ்கியதால் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர் தண்ணீரில் மூழ்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணைய நடத்தி வருகின்றனர்.
