ஓயாமல் அழுத குழந்தை - அடித்து கொன்ற கொடூர தந்தை

ஊட்டியில், ஓயாமல் அழுது கொண்டு இருந்ததால் ஆத்திரத்தில், 5 மாத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-01 06:24 GMT
கைது செய்யப்பட்ட பிரேம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி, பழைய ஊட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம் (31) இவருடைய மனைவி ரம்யா (21). பிரேம் ஊட்டியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு கடந்த 1.5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கேத்தரின் ஏஞ்சல் என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. பிரேம் தினமும் காலை 7 மணிக்கு வேலைக்கு சென்று, இரவு 9 மணிக்கு வீடு திரும்புவார்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு தான் பிரேம் வேலைக்கு சென்றுள்ளார். அவர் வேலைக்கு சென்று சிறிது நேரத்தில் குழந்தையின் 2 கன்னங்களும் சிவந்த நிலையில் இருந்தது. மேலும் நீண்ட நேரம் ஆகியும் குழந்தையிடம் எந்த அசைவும் காணப்படவில்லை. கண்கள் சற்றே திறந்த நிலையில் அசைவின்றி இருந்ததால், தாயார் ரம்யா பயந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாததால் அவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுருத்தினர். இதன்படி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த ரம்யா இதுகுறித்து ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் முரளிதரன், துணை ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த சில நாட்களாகவே குழந்தையின் அழுகை சத்தம் தாங்க முடியாததால் கணவர் பிரேம் அவ்வப்போது குழந்தையை அடித்து வந்துள்ளார். இதற்கு ரம்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ரம்யா அவரது வீட்டின் அருகில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது குழந்தை அழுததால், ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையை அடித்ததில் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடிபட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து இந்த சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி போலீஸார் பிரேமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், குழந்தையின் தந்தைக்கு மனநல பாதிப்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ....

Tags:    

Similar News