தர்மபுரியில் கொடூரம் : கத்திக்குத்துடன் அடையாளம் தெரியாத இரண்டு சடலம் - மர்ம கும்பலுக்கு போலிசார் வலைவிச்சு !!

Update: 2024-09-25 07:37 GMT

கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம கும்பல், சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் வீசி விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தடங்கம் அருகே வெத்தலகாரன்பள்ளம் செங்காளம்மன் கோயில் அருகே, புதியதாக அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, சுமார் 600 மீட்டர் தொலைவில், நேற்று அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமும், 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலமும் கத்திக்குத்து காயங்களுடன் அழுகிய நிலையில் கிடந்தது.

இதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள், அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். சடலமாக கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. இருவரும் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து 2 பேரின் உடல்களையும், பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க விடப்பட்டது. மேலும், தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

கொலையுண்ட ஆண் குங்கும நிறத்தில் பேண்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார். அவரது மார்பு, வயிறு பகுதிகளில் 5 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. முதுகிலும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. மேலும், அவரது கழுத்து பெல்ட்டால் இறுக்கப்பட்ட அடையாளம் இருந்தது. மேலும், முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது. அவரது இடது காலில் ஒரு செருப்பும், மற்றொரு செருப்பு சடலத்தின் அருகேயும் கிடந்தது.

அதே போல், கொலையான பெண் பச்சை நிறத்தில் சேலையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். அவரது மார்பில் கத்திக்குத்து இருந்தது. மேலும், அவரது கழுத்து சேலையால் நெரிக்கப்பட்டிருந்தது. அவரது ஆடைகள் அலங்கோலமாக கலைந்திருந்தது. இதனால், கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இருவரையும் வேறு இடத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்த மர்ம கும்பல், காரில் எடுத்து வந்து இப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்து வீசி விட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. கொலையானவர்கள் தம்பதியா அல்லது தகாத உறவு காதல் ஜோடியா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் போன்றவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில், 4 கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News