மயிலாடுதுறை: மீண்டும் ஓர் ஆபாச வீடியோ மிரட்டல் - 4பேர் கைது

மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.2.70 லட்சம் பணத்தை பறித்து, ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-22 03:47 GMT

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் வெங்கடேசன் (59). காரைக்காலில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை (CPWD -EE) செயற்பொறியாளராக பணியில் உள்ளார். திருநள்ளாறு சாலையில் யூனிகான் டவர் என்ற குடியிருப்பு வளாகத்தில் தனி வீடு எடுத்து தங்கியுள்ளார் இவரது குடும்பம் சென்னையில் உள்ளது.

இவருக்கு, மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த ஐயப்பன் மனைவி சுபாஷினி (40) என்பவருடன் புரோக்கர் மூலமாக தொடர்பு ஏற்பட்டு, கடந்த 6 மாதங்களாக தவறான உறவு இருந்துள்ளது. ஒவ்வொரு முறையும் காரைக்காலுக்கு செல்லும்போதும் குடும்ப வறுமையை காரணம் காட்டி சிறுக சிறுக சுபாஷினி பணம் பெற்றுள்ளார். அப்போது ஒருமுறை இருவரும் தனிமையில் இருந்ததை கடந்த மாதம் 27-ஆம் தேதி வெங்கடேசனுக்கு தெரியாமல் சுபாஷினி செல்போனில் படம் பிடித்துள்ளார்.

பின்னர், கடந்த மாதம் 29-ஆம் தேதி வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்த சுபாஷினி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளரான மயிலாடுதுறையை சேர்ந்த கில்லி பிரகாஷ் (40) என்பவருக்கு தகவல் தெரிவித்து தனியார் விடுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு தனது கூட்டாளிகளான முகமது நசீர் (39), தினேஷ் பாபு (31) ஆகியோருடன் வந்த கில்லி பிரகாஷ் சுபாஷினியுடன் இணைந்து வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அப்போது அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டு மற்றும் ஜிபே வாயிலாக ரூ.2.70 லட்சத்தை அவரிடம் இருந்து பிடுங்கி உள்ளனர்.

மேலும், சுபாசனியுடன் வெங்கடேசன் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டி அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் குறித்து வெங்கடேசன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் கில்லி பிரகாஷ், சுபாஷினி உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆண் குற்றவாளிகள் மூவரையும் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். சுபாசினியை திருவாரூர் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட கில்லி பிரகாஷ் 2011 ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளில் நான்கு பேர் மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மீண்டும் அது போல ஓர் ஆபாச வீடியோ விவகாரத்தில் கைது விவகாரம் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Tags:    

Similar News