அப்படி ஒரு குறளே இல்லையேப்பா..!! ஆளுநர் அளித்த விருதில் ‘போலி’ திருக்குறள்: ப.சிதம்பரம்

சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில், இல்லாத ஒரு திருக்குறள் அதாவது போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-07-16 10:54 GMT

 ப.சிதம்பரம் கேள்வி

தேசிய மருத்துவ தினத்தையொட்டி கடந்த 13ம் தேதி ஆளுநர் மாளிகையில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 50 மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு நினைவுப் பரிசாக கேடயம் வழங்கப்பட்டது. அந்தக் கேடயத்தில் திருக்குறள் ஒன்றும், அச்சிடப்பட்டிருந்தது. மேலும், அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என்றும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிந்தது. ஆனால் தற்போது அப்படி திருக்குறளே இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆளுநர் வழங்கிய நினைவுப் பரிசில் போலியான திருக்குறள் இடம்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது ஆளுநர் மாளிகை வழங்கிய கேடயத்தில்,

செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு

மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு. ( திருக்குறள் 944) - என குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆனால், உண்மையாக திருவள்ளுவர் எழுதிய 944வது குறள்,

அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து. - என்பதுதான் .

ஒரு வேளை குறளின் எண் மாறியிருக்கலாம் என்றால், அதுவும் இல்லை ; திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களில் இப்படி ஒரு குறளே இல்லை என்கிறனர் தமிழ் ஆர்வலர்கள்.  ஆளுநர் மாளிகையின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “13-7-2025 அன்று 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற நூலைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது. அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன் சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலி 'குறள்' பொறிக்கப்பட்டிருந்தது என்பது தான் அதிர்ச்சிச் செய்தி குறள் 944' என்று பொறிக்கப்பட்ட 'குறள்' திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அது போன்ற பாடலே நூலில் இல்லை என்று தெரிய வருகிறது. குறள் 123 லிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல் காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை 'குறள்' என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் போலிச் சித்திரம், போலிக் குறள் ....இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Similar News