நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு!!
நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.;
EPS
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 19-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20-ந் தேதி நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரிலும், 21-ந் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக அவரின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக அக்டோபர் 5 மற்றும் 6-ந் தேதிகளில் பிரச்சாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்செங்கோடு தொகுதியில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகிலும், அதன்பிறகு குமாரபாளையம் தொகுதியில் ஓலப்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய உள்ளார். அதேபோல், திங்கட்கிழமை மாலையில் நாமக்கல் பழைய பஸ் நிலையம் அருகிலும், அதைத்தொடர்ந்து பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்-பொத்தனூர் நான்குரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் பரப்புரை செய்ய அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியிருந்தநிலையில் தற்போது தேர்வு செய்த இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தனியாருக்குச் சொந்தமான இடங்களை தேர்வு செய்து அனுமதி கேட்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனைத்தொடர்ந்து நாமக்கல் மற்று நாமக்கல் மற்றும் பரமத்தி சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்ய இருந்த இடங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.