குற்றவாளிகளை உடனடியாக காவல்துறை கைது செய்திருக்கிறது: கனிமொழி
கோவையில் கல்லூரி மாணவி சமூகவிரோதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.;
Kanimozhi
கோவையில் தனியார் விடுதியில் தங்கி, உயர்கல்வி பயின்று வரும் 21 வயது கல்லூரி மாணவி, நேற்று முன் தினம்(02.11.2025) இரவு கோவை விமான நியைத்திற்கு பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பிருந்தாவன் நகர் பகுதியில் தனது ஆண் நண்பருடன் காருக்கு உள்ளே பேசிக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அங்கு ஆயுதங்களுடன் வந்து, காரை உடைத்து, ஆண் நண்பரை சரமாரியாக வெட்டி விட்டு, மாணவியை கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயத்துடன் மாணவியின் ஆண் நண்பர் உயிர் ஊசலாடிய நிலையில் காவல்துறையின் அவசரப் பிரிவுக்கு பேசி, காவல்துறையின் உதவியுடன் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து காவல் துறையினர் தேடியதில் அதிகாலை 4 மணிக்கு, கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இக்கொடூர செயலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் சுட்டுப்படித்தனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “கோவையில் கல்லூரி மாணவி சமூகவிரோதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. குற்றவாளிகளை உடனடியாக காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம். இனியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யாமல் நாம் பண்பட்ட சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.