வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும்: மு.க.ஸ்டாலின்
வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Stalin
பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சட்டசபையில் முதலமைச்சர் கூறியதாவது, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல முழுமையாக திரும்பப்பெற வேண்டியது. சில கட்சிகள் துணையுடன் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட மசோதா இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பின்மீது நடத்தப்பட்ட தாக்குதல். பெரும்பாலான கட்சிகள் எதிர்த்த நிலையில் சில கட்சிகளின் துணையுடன் அதிகாலை 2 மணிக்கு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பூர்வமாக எதிர்த்து வெல்வோம் என்று அவர் கூறினார்.