திமுகவின் தேர்தல் குழுக்கள் அறிவிப்பு: பொன்முடி, உதயநிதி, ராஜேஷ்குமாருக்கு முக்கிய பொறுப்பு

Update: 2024-01-19 10:45 GMT

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உதயநிதி ஸ்டாலின் தலமையிலான இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி விரிவான தகவல்களை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை தொடங்கி , அதிமுக வேட்பாளர்களையும் அறிவிப்பதில் முதலிடத்தில் இருந்தவர் ஜெயலலிதா. ஒரு முறை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு பல முறை வேட்பாளரை மாற்றும் வழக்கம் கொண்டவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு, அதிமுகவின் வேகம் மந்தமாகிவிட்டது என்றே கருதப்படுகிறது. அதே நேரத்தில் ராமர் கோவில் திறப்பு முடிந்தவுடன் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் திமுகவின் தேர்தல் பணி சூடு பிடித்திருக்கிறது. மற்ற கட்சிகளை விட தமிழ்நாட்டில் திமுகவின் தேர்தல் பணிகள் முன்னணியில் இருக்கிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரம் பூத்களுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை நியமித்து அவர்களுக்கு 5 மண்டல வாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும் ஒரு பொறுப்பாளர் என 6 லட்சம் பேர்களை நியமித்து திமுக பெரும் சாதனை செய்திருக்கிறது.கடந்த மாதத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை மேற்பார்வை செய்ய பத்து பூத்களுக்கு ஒருவர் என சத்தமில்லாமல் நியமனம் செய்து,கட்சியின் அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் வாக்குச்சாவடிகள் பிரித்து வழங்கப்பட்டிருக்கின்றன.

பிரதான எதிர்கட்சியான அதிமுக சத்தமில்லாமல் கிடக்க, பாஜகவோ தமிழ்நாட்டில் எடுபடாத விஷயங்களை ஊடகங்களில் மட்டும் சத்தம் போட்டு பெரிதாக்கிக் கொண்டிருக்க, இன்று அதிரடியாக மூன்று குழுக்களை நியமித்திருக்கிறது திமுக தலைமை.

கே.என்.நேரு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு என்று அமைக்கப்பட்டு அதில் மண்டலத்துக்கு ஒருவர் என மேற்கு மண்டலத்துக்கு உதயநிதி, வடக்குக்கு எ.வ.வேலு, தெற்கில் தங்கம் தென்னரசு, டெல்டாவுக்கு நேரு, சென்னைக்கு ஆலந்தூர் பாரதி என தேர்தல் வித்தகர்கள், கட்சிக்காரர்களை அடக்கி ஆளும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கனிமொழி கருணாநிதி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டு அதில் அறிவுஜீவி பிடிஆர், உலக முதலீட்டாளர் மாநாட்டில் மாஸ் காட்டிய டிஆர்பி ராஜா, சென்னை வெள்ளத்தில் களமாடிய மேயர் பிரியா, நாமக்கல்லைச் சார்ந்த இளம் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எம்.எம்.அப்துல்லா, கொறடா கோவி செழியன், மருத்துவர் எழிலன், மாணவரணிச் செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், திராவிடச்சுரங்கம் டிகேஎஸ் இளங்கோவன் என்று இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் நிரம்பிய சிறப்பான ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொகுதி உடன்பாடு தொடர்பாக குகூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கழக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் மூத்த தலைவர்களான ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என். நேரு, ஆ.ராசா ஆகியோர் நிறைந்த குழு என மூன்று குழுக்களை திமுக அறிவித்துள்ளது.

சத்தமில்லாமல் தேர்தல் பணிகளைச் செய்து கட்டமைப்பை வலுவாக்கி வைத்திருக்கும் திமுக, இவ்வளவு விரைவாக இத்தகைய குழுக்களை அறிவிக்கும் என எதிர்கட்சியினர் மட்டுமில்லாமல் கூட்டணிக்கட்சிகளே எதிர்பார்க்கவில்லை என்றே பேசப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின்,டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எம்.அப்துல்லா, மேயர் ப்ரியா போன்ற புதியவர்களும்,

டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்,ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு,

கனிமொழி,டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் போன்ற அனுபவமிக்கவர்களை தேர்ந்தெடுத்து குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் என்று வந்துவிட்டால் திமுகவின் பலம் யானை பலம் என்று எம்.ஜி.ஆர் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களைப் பேசும் போது சொல்வாராம். அதைத்தான் திமுக இன்று வரை காட்டிக் கொண்டிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரம், களப்பணி என இக்குழுக்களுக்கான பணிகள் உடனடியாக தொடங்கும் என்று திமுக வட்டாரம் தெரிவிக்கிறது.

Tags:    

Similar News