பாலியல் தாக்குதல், ஆயுத கலாச்சாரத்தை ஒடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பாலியல் தாக்குதல், ஆயுத கலாச்சாரத்தை ஒடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2025-02-18 09:38 GMT

Edapadi palanisamy

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதே பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வலம் வருவதாக செய்திகள் வருகின்றன. பெண் காவலருக்கே பொது இடத்தில் இப்படியொரு கொடுமை நடக்கிறது என்றால், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. பொது இடத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறலும், ஆயுதக் கலாச்சாரமும் தனிப்பட்ட விஷயங்கள் என்று இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு கடக்க முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவையெல்லாம் சட்டம் ஒழுங்கில் தான் வரும் என்பதாவது இன்றைக்கு முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுக்க தலை தூக்கி உள்ள ஆயுதக் கலாச்சாரத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News