நாமக்கல்லில் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டம்

“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம் - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி - கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் எம்.பி பங்கேற்பு

Update: 2024-02-16 20:12 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் அறிவிப்பின்படி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகள், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்த அதிமுக வின் துரோகங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாக “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கூட்டம் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி, நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவா் பேசுகையில், லட்சியத்தின்படி செயலாற்றியவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என்று சொன்னால் அப்படி தனக்கு வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து, சொன்னதைச் செய்கின்ற பண்பு நம் முதல்வருக்கும் மட்டும் தான் உள்ளது. தேர்தலுக்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது மோடி அரசு. விளம்பரம் மோக தலைவர் மோடி. நாம் ஒரு ரூபாய் தந்தால் நமக்கு 29 காசுகள் தான் ஒன்றிய அரசு திருப்பி தருகிறது. நமக்கான நிதியை பிற மாநிலங்களுக்கு மடை மாற்றம் செய்கிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டு மீது நயவஞ்சகம் செய்துள்ளது. கடந்த 10 ஆண்டு காலமாக ஒன்றிய அரசு, ஜனநாயக மரபுகளின் மீது, மத நல்லிணக்கத்தின் மீது வெந்நீரைப் பாய்ச்சி வருகின்றது. நசுக்கப்பட்டு இருக்கின்ற உரிமைகளை நாம் தமிழ்நாட்டில் மட்டுமே மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை. இந்தியா முழுமையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தல் களத்தில் முன் களத்திலே இருக்கின்றது.

தேர்தல் களத்திலே இன்றைக்கு நின்று நெஞ்சை நிமிர்த்தி உரிமைக்காக போராடுவதும், இந்த நாட்டை பேராபத்திலிருந்து காக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதற்குமான காரணத்தை விளக்கி சொல்வதற்கான அருமையான கூட்டம், இந்தக் கூட்டம். பிரிவினையை தூண்டி மத வெறியை தூண்டி வருகிறது பாஜக. நாம் விழித்து எழ வேண்டும். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.நம்முடைய உரிமைகளை மீட்டெடுக்கின்ற வெற்றி விழாவாக, வெற்றி முழக்கமாக, வெகு சீக்கிரத்திலேயே நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வரதராஜன், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சட்டத்துறை இணை செயலாளர்கள் பி.ஆர்.அருள்மொழி (நாமக்கல்), தீர்மானக் குழு இணை செயலாளர் கே.முத்துசாமி (சேந்தமங்கலம்), சட்டத்துறை இணை செயலாளர் கே.எம்.தண்டபாணி (ராசிபுரம்), மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா (பரமத்தி வேலூர்), மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பி.சி.சந்திரகுமார் (திருச்செங்கோடு), மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் முருகவேல் (சங்ககிரி), மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் கழக செயலாளா்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News