பொன்முடியை போல் திமுகவில் 10 தலைகள் மீது தொங்கும் கத்தி...சீட்டுக்கட்டாய் சரியும் கட்சியை காப்பாற்றுவாரா ஸ்டாலின்..?

திமுக அமைச்சர்களின் வாண்டட் லிஸ்டில் மேலும் 10 பேருக்கு ஸ்கெட்ச் போட்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ;

Update: 2023-12-22 13:35 GMT

Dmk ministers 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அமைச்சர் பொன்முடி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இதேபோல் திமுக அமைச்சர்களின் வாண்டட் லிஸ்டில் மேலும் 10 பேருக்கு ஸ்கெட்ச் போட்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக பெரும்புள்ளிகள் மீதும் தற்போதுள்ள ஆட்சியில் முக்கிய மூத்த அமைச்சர்களாக உள்ளவர்கள் ஊழல் மற்றும் மோசடி புகாரில் சிக்கி வழக்குகளை சுமந்துள்ளனர். கிட்டத்தட்ட 10 அமைச்சர்கள் மீது மத்திய அரசின் விசாரணை முகமைகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

Advertisement

அந்த வகையில் திமுகவில் யார், யார் தலை மீது கத்தி தொங்குகிறது என்ற பட்டியலில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. அண்மையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தது. 

இதேபோல் கடந்த ஜூன் மாதம் ஊழல் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்த இலாகா மாற்றப்பட்டாலும் செந்தில் பாலாஜி மீதான வழக்கு இன்னும் முடியவில்லை. விசாரணையில் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரின் பதவிக்கு ஆபத்தாகிவிடும். 

இதேபோன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோரும் ஊழல் மற்றும் மோசடி புகார்களில் சிக்கியுள்ளனர். அமைச்சர்களின் வரிசையை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் மூத்த தலைவருமான ஜெகத் ரட்சகனும் வருமான வரி சோதனையில் சிக்கியுள்ளார். 

இப்படி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான மோசடி மற்றும் ஊழல் வழக்குகளால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பலத்த பின்னடைவு ஏற்படும் என அரசியல் விமர்சனமாக கூறப்பட்டாலும், மற்றொரு பக்கம் திமுக கட்சியின் நிதி ஆதாரம் பாதிக்கப்படும் என்றே கூறப்படுகிறது. 

தற்போது தண்டனை பெற்ற பொன்முடி விழுப்புரத்திலும், செந்தில் பாலாஜி கரூரிலும் பலம் வாய்ந்த தலைகள். இவர்கள் கட்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான நிதி வழங்குவதில் பலம் வாய்ந்தவர்கள். இப்படி இருவரது செல்வாக்கும் மக்கள் மத்தியில் இழந்தால், அவர்களின் வெற்றிடத்தை நிரப்புவதில் திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இது ஒரு பக்கம் இருந்தாலும், அமைச்சர்கள் மீதான குற்றவழக்கை விசாரிப்பதில் கீழமை நீதிமன்றங்கள் மெத்தனமாக நடந்து கொண்டந்தாக உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. 

இது வரும் காலங்களில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பிற அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கின் விசாரணையில் கிடுக்கிப்பிடியை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதனால், வரும் காலங்கள் மேலே குறிப்பிட்ட திமுக தலைகள் மீதான வழக்கு விசாரணையில் கடுமையாக நீதிமன்றங்கள் நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. 

இப்படி வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றங்கள் கடுமை காட்டினால் திமுகவின் பலம் சீட்டுக்கட்டை போல் சரிய தொடங்கும் என்பதே நிதர்சனம். இதை உணர்ந்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்க வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் ஆலோசனையாக உள்ளது.

Tags:    

Similar News