சட்ட விரோத கல்குவாரிகள்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.

சட்ட விரோத கல் குவாரிகள்- கரூர் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.

கரூர் மாவட்டத்தில் செயல்படும், சட்ட விரோத கல் குவாரிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், மத்திய, மாநில, மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகள், நிபந்தனைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை. எனவே, இவற்றின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கரூரைச் சேர்ந்த மதியழகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 'கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு செய்து, விதிகளை பின்பற்றாத 31 குவாரிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி, சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக கனிமவளத்துறை செயலாளர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Tags

Next Story