24மணி நேரத்தில் குற்றவாளி கண்டுபிடிப்பு: பாராட்டு

24மணி நேரத்தில் குற்றவாளி கண்டுபிடிப்பு: பாராட்டு

கொலை குற்றவாளி

24 மணி நேரத்தில் கொலை குற்றவாளி கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம், வாங்கல் காவல் எல்லைக்குட்பட்ட நெரூர் சாலையில், ஓடையூர் கணேசன் என்ற விவசாயி கிணற்றில், பிப்ரவரி 9-ம் தேதி காலை 10 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு ஆண் பிணம் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர், சரக காவல்துறை துணை தலைவர் ஆலோசனைப்படி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது

விசாரணையில் இறந்தவர் திருஞானம் வயது 63 என்பதும் வாங்கல் அருகே உள்ள முனியப்பனூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் தொடர் விசாரணை மேற்கொண்ட போது, இறந்து போன திருஞானத்துடன் வேலை பார்த்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த கோழி குமார் என்கிற குமார் வயது 45 என்பவர், பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக, திருஞானத்தை கொலை செய்து, தடயங்களை அழித்து கிணற்றில் தள்ளிவிட்டு சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது.

கொலை குற்றவாளியை, 24 மணி நேரத்தில் தீவிர விசாரணையில் கண்டுபிடித்தமைக்காக, கரூர் காவல்துணை கண்காணிப்பாளர் சரவணன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி, பசுபதிபாளையம் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தனிப்படையினரை மத்திய மண்டல காவல்துறை தலைவர், திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story