மூத்த முதுகலை ஆசிரியர்கலைவாணனை தலைமை ஆசிரியராக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் உள்ள டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி அரசு விதிமுறைகள்படி மூத்த ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி கொடுக்காததைக் கண்டித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் 18 ஆண்டுகளாக மூத்த முதுகலை ஆசிரியராக கலைவாணன் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த ஒரு வருடமாக உதவி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார். அரசு விதிமுறைகளின்படி பணியில் மூத்த முதுகலை ஆசிரியர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட வேண்டும். இந்நிலையில், மூத்த முதுகலை ஆசிரியரான கலைவாணனுக்கு தலைமை ஆசிரியர் பணி வழங்கப்படுவதற்கு மாறாக, 10 வருடங்கள் கூட முதுநிலை ஆசிரியர் பணியை பூர்த்தி செய்யாத எட்டாவது நிலையில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கலைவாணனை தலைமை ஆசிரியராக பணியமர்த்த வலியுறுத்தி பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் ஏற்கப்படவில்லை. இதனை கண்டித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் இன்று பள்ளியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பேசி, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Next Story