தரங்கம்பாடி அருகே மீன் இறங்குதளம் திறப்பு விழா

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுகா சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன் சிறப்புரையாற்றினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி மீனவ கிராமத்தில் மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்பிடி இறங்கு தளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த மீன்பிடி இறங்கு தளத்தை தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சந்திரபாடி மீனவ கிராமத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மீன்பிடி இறங்குதலத்தை மீனவர் பயன்பாட்டிற்கு கிராம மக்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அவர் சிறப்புரையாற்றுகையில் மத்திய அரசு தமிழகத்திற்குத் தேவையான நிதியை வழங்காத நிலையில் கடுமையான நிதி நெருக்கடி சூழலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பான நிர்வாகம் மூலம் பொது மக்களுக்கும் மீனவ மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று உதவித்தொகையை ரூபாய் 8000 ஆக உயர்த்தி தந்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் முக்கியமானதாக உலக வெப்பமய மாதலால் கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் கடல் அரிப்பை தடுப்பதற்கு கல் தடுப்பு சுவர் தேவைப்படும் இடங்களில் அமைப்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும் என்றும் தினந்தோறும் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்கும் தமிழக முதல்வருக்கு நாம் என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்பி சுதா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை எம்எல்ஏ நிவேதா முருகன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story