மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை எனக்கூறி நூதன மோசடி

மயிலாடுதுறை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன முறையில் பண மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், ரேணுகாதேவி தம்பதியினரின் மகள் ரூபஸ்ரீ (வயது 9) இச்சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த ஆந்திராவை சேர்ந்த இரு நபர்கள் ராஜசேகர் மற்றும் ரேணுகா தேவியை அணுகி ரூபஸ்ரீக்கு சிகிச்சை அளிப்பதாகவும், 6 மாதத்தில் குணமாகிவிடும் எனவும் தெரிவித்து உள்ளனர். சிகிச்சைக்காக ரூ.84 ஆயிரம் பணத்தைப் பெற்ற அந்த இரு நபர்களும் பின்னர் மீண்டும் வரவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவானதை அறிந்த ராஜசேகர் மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ராஜசேகரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்து தலைமறைவாகி, புதுக்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்த ஆந்திர மாநிலம் சத்திய சாயி மாவட்டம் இந்துபூர், லே பாக்ஸ் பகுதியைச் சேர்ந்த சிவப்பா மகன் மஞ்சுநாதன் (42), சன்னப்பா மகன் அன்னப்பா (44) ஆகிய இருவரையும் மணல்மேடு போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, அவர்களை மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை நடத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story