வீட்டிலிருந்து நகை திருட்டு போனதா நாடகமாடிய தம்பதியினர் மீது வழக்கு

மயிலாடுதுறை அருகே வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றதாக பொய் புகார் அளித்த கணவன் மனைவி மீது வழக்கு:- பொய் புகார் அளிப்பவர்கள்மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி. ஸ்டாலின் எச்சரிக்கை
:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மூவலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(44) இவர், கடந்த 2-ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெளிப்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1,10,000 ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில் திருட்டுப் போனதாக கூறப்பட்ட சம்பவம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகிய இருவரும் 2 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.74,000 ரொக்க பணத்தை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகவும், மீதமுள்ள 9 சவரன் தங்க நகைகள் அடமானத்தில் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தொடர் விசாரணை மேற்கொண்டதில் குத்தாலம் போலீஸார் பொய்யான புகார் அளித்தமைக்காக மணிகண்டன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்தனர். மேலும் விசாரணையின் போது மணிகண்டன் தம்பதியினர் தாமாக முன்வந்து ஒப்படைத்த 2 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.74,000 பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுபோன்று பொய் புகார் அளிப்பவர்கள்மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
Next Story