தர்மபுரம் ஆதீன த்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாத உதவித்தொகை
தருமபுரம் ஆதீனம் மற்றும் குளோபல் ஹூயுமனிடேரியன் மிஷன் நிறுவனர் சத்குரு ஸ்ரீ மதுசூதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முழுவதும் 30 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயின்றுவரும் நிலையில், அவர்களில் ஏழ்மை நிலையில் உள்ள 2000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5-ஆம் வகுப்புவரை பயிலும் ஏழை மாணவர்களுக்கு மாதம் ரூ.300, 6 முதல் 8-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.400, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500 மற்றும் 11, 12-ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.600 என வருடத்துக்கு 10 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது. கர்நாடகாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீமதுசுதன் சாய் குளோபல் ஹூயுமனிடேரியன் மிஷன் இந்த நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது. பாரத் ராஷ்ட்ரிய நிர்மான் வித்யார்த்தி நிதி என்ற இத்திட்டத்தின் தொடக்க விழா தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் ஆகியோர் இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தனர்.
Next Story



