சூப்பர் மார்க்கெட்டில் மின்சாரம் தாக்கி பெண் பலி

X
மயிலாடுதுறை அருகே ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 21 வயது இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டதாக நிர்வாகத்தினர் கூறிய நிலையில் இறப்பில் சந்தேகம் உள்ளதாக குற்றம்சாட்டி உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே நள்ளிரவில் சாலைமறியல் போராட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காளியப்பநல்லூர் ஊராட்சி தொடரி பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இறந்த தம்பதிகள் மதியழகன் வாசுகி ஆகியோரின் மகள் ஷீலா (21). இவர் பெரிய மடப்புரம் கிராமத்தில் உள்ள அக்கா காவ்யா என்பவரது வீட்டில் வசித்து வந்தார். ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் உள்ள தனியார் (மால்) சூப்பர் மார்க்கெட்டில் நான்கு வருடமாக ஷீலா வேலை செய்து வந்தார். இந்நிலையில் இரவு சூப்பர் மார்க்கெட்ட்டில் மின்சாரம் தாக்கி ஷீலா படுகாயமடைந்து விட்டதாகவும் செம்பனார்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக உறவினர்களுக்கு நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது ஷீலா இறந்து விட்டதாகவும் தாமதமாக கொண்டு வந்துள்ளார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் கடை நிர்வாகத்தினரை உறவினர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அறிந்து வந்த செம்பனார்கோவில் போலீசார் ஷீலாவின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள சவகிடங்கில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்று வைத்தனர். மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் ஷீலாவின் உடலில் மின்சாரம் தாக்கியதற்கான காயங்களோ அறிகுறிகளோ இல்லையென்றும் இறப்பில் சந்தேகம் உள்ளதாக குற்றம் சாட்டி சூப்பர் மார்க்கெட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும், உரிய விசாரணை நடத்த வேண்டும், ஷீலாவின் சாவுக்கு நீதி வேண்டும் என்று கூறி மருத்துவமனை அருகே மயிலாடுதுறை கும்பகோணம் மெயின் ரோட்டில் நள்ளிரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் குடித்துவிட்டு பேசுவதாக கூறியதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து செம்பனார்கோவில் போலீசார் வழக்கை மடைமாற்றிவிடுவார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கூறியதால் செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் போராட்டக்காரர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் இழப்பீடு வழங்க ஒத்துக் கொண்டதன் பேரில்போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story

