இரண்டாம் கால பூஜையில் உச்ச நீதிமன்ற நீதிபதி
வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற 2ஆம் கால யாகசாலை பூஜையில் திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்று கொடிமரம் முன்பு விநாயகர் சிலையை பிரதிஸ்டை செய்து வைத்தார். உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் வருகின்ற வெள்ளிக்கிழமை 4-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தாருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக ஆபிராச வேள்வி நடத்தி, அந்த வேள்வியில் தோன்றிய யானையை இறைவன்பால் ஏவிவிட, சிவபெருமான் அந்த யானையை அழித்து, அதன் தோலை போர்த்தி கொண்டு வீரச்செயல் நிகழ்ந்த தலம் வழுவூர். அட்டவீரட்ட தலங்களில் 6-வது தலமான இக்கோயிலில் சிவபெருமான் கஜசம்ஹார மூர்த்தியாக விளங்குகிறார். இந்துசமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 கால யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற 2ஆம் கால யாகசாலை பூஜையில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான பரமாச்சரிய சுவாமிகள் பங்கேற்றார். கொடிமரம் முன்பு விநாயகர் சிலையை பிரதிஸ்டை செய்வித்தார். தொடர்ந்து 2ஆம்கால யாகசாலை பூஜை நிறைவுற்று மகாபூரணாகுதி, மகாதீபாரதனை நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜையில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் பங்கேற்று கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story




