கனமழையால் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

கனமழையால் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
X

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. இரவு தொடர்ந்து பரவலாக கனமழை பெய்ததில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை 11 செ.மீ., மணல்மேடு 11 செ.மீ., சீர்காழி 24 செ.மீ., கொள்ளிடம் 19 செ.மீ., தரங்கம்பாடி 9 செ.மீ., செம்பனார்கோவில் 5 செ.மீ., மாவட்டத்தில் சராசரியாக 131.8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் அறுவடை பணிகள் துவங்கிய நிலையில் தாழ்வான பகுதிகளில் விவசாய நிலங்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. ஆனந்த தாண்டவபுரம்,கீழ மருதாந்தநல்லூர் மேல மருதாந்தநல்லூர், மாப்படுகை, பாண்டூர் பொன்னூர் அருண்மொழித்தேவன், தரங்கம்பாடி தாலுகா நரசிங்கநத்தம், கடக்கம், சேத்தூர் பெரம்பூர் அரசூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா தாளடி பயிர்கள் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் வயலில் சாய்ந்துள்ளது. இந்த மழை தொடர்ந்து நீடித்தால் மூழ்கியுள்ள பயிர்கள் முளைத்து விடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை நீடித்து வருகிறது. மழை நின்று தண்ணீர் வடிந்தாலும் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது மகசூல் இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story