துக்கநிகழ்வுக்கு சென்றுவிட்டு வந்த அண்ணாமலை: கட்சி கொடி ஏற்றிய நிர்வாகி

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கரூருக்கு விஜயம் செய்தார். குறிப்பாக கரூர் மாவட்டம் கரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட என்.புதூர் அருகே உள்ள சிந்தாயூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் இங்கிலாந்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் உயிர் இழந்தார். இன்று அவரது வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்து, கனகராஜ் தாயார் மற்றும் சகோதரிக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு கரூர் நோக்கி திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, என்.புதூர் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கரூர் கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர் அருள் முருகன் தலைமையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த கட்சி கொடியை ஏற்றி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். தான் இப்போது துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பி உள்ளதால் கட்சி கொடி ஏற்றி வைப்பது உகந்ததாக இருக்காது என தெரிவித்து, அருள்முருகனை கட்சி கொடி ஏற்றி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் முன்பு அருள்முருகன் கட்சி கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story