ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் ஜாமின் தள்ளுபடி

ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் ஜாமின் தள்ளுபடி

பைல் படம் 

தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலின் முன்ஜாமீன் மனுவிற்கு அரசு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்ததால் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில், மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், திருவெண்காடு சம்பா கட்டளையைச் சேர்ந்த விக்னேஷ், செம்பனார்கோயில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ், ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கில் தொடர்புடைய செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தருமபுர ஆதீனகர்த்தரின் நேர்முக உதவியாளர் செந்தில், திருக்கடையூர் விஜயகுமார், திருச்சியைச் சேர்ந்த பிரபாகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்படாததால் போலீசார் குறறப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.ஆதீனத்தில் நேர்முக உதவியாளர் செந்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் பெறமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட 5 நபர்களில் சீனிவாஸ் என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாமீனில் சென்று விட்டார்., மற்ற நான்கு பேர் 90 நாட்கள் சிறையில் இருந்ததை தொடர்ந்து நிபந்தனை ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2வது நபரான தலைமறைவாக உள்ள தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் முதல்முறையாக முன்ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாயகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்படாததால் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யமுடியவில்லை என்றும் செந்திலை கைது செய்து நீண்ட விசாரணை செய்தால்தான் வழக்கு முடிவடையும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் வாதிட்டார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏனைய குற்றம் சாட்டபட்டவர்களின் ஜாமீன் மனு விசாரணையில் செந்தில் அவசியம் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்ததை மேற்கோள்காட்டினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாயகிருஷ்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags

Next Story