மது போதையில் தகராறு; பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர் கைது

கரூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர் போலீசார் கைது செய்தனர்.

கரூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் பாபு மகன் சரத்குமார் வயது 32. அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மகன் கௌதம் வயது 27. இருவரும் நண்பர்கள். இருவரும் மது பிரியர்கள். ஜனவரி 7ஆம் தேதி இரவு 10.1/4 மணி அளவில் சரத்குமார் வீட்டின் அருகில் கௌதம் உடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். போதை ஏறியதும் இருவரும் பேசும் போது,வாய் வார்த்தையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், சரத்குமார் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அப்போது, கௌதம் தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தை பேசியதோடு கையில் இருந்த பீர் பாட்டிலால் சரத்குமாரை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் சரத்குமாருக்கு முதுகின் இடது புறத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரத்குமாரின் தந்தை பாபு, கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மது போதையில் தகாத செயலை செய்த கௌதமை கைது செய்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர். சிறையில் அடைக்கப்பட்ட கௌதம் மீது, ஏற்கனவே கரூர், வெங்கமேடு, திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் போன்ற காவல் நிலையங்களில் பல்வேறு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story