சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

திருவள்ளூர் மாவட்டம்,சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

செவ்வாய்க்கிழமையில் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்பி சீனிவாச பெருமாள் ஆகியோர் சிறுவாபுரி முருகன் கோவிலில் திடீர் ஆய்வு செய்தனர். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிடம் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.

குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதன் தொடர்பாகவும், அதற்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ள பக்தர்களிடமும் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது மாவட்ட ஆட்சியர் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தருதல், போக்குவரத்து, வரிசையில் எளிமையாக செல்வது, பக்தர்கள் தங்குமிடம், ஓய்வறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறினார்.

இது தொடர்பாக திட்டம் தயாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கோவிலின் எதிரே அமைந்துள்ள கடைகள் நெறிமுறைப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story