350 ஆண்டுகால பழமையான கோயில் அகழாய்வு

350 ஆண்டுகால பழமையான கோயில் அகழாய்வு

அகழாய்வு பணிகள் தீவிரம்

மயிலாடுதுறை அருகே முற்றிலுமாக சிதிலமடைந்த பாலையூர் வாஞ்சீஸ்வரர் கோயிலை பழைமை மாறாமல் புனரமைக்க அகழாய்வு பணிகள் தீவிரம். கண்டெடுக்கப்பட்ட கோயிலின் அடித்தளம் மற்றும் ஆபரணத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான மங்களாம்பிகை சமேத வாஞ்சீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் இயற்கை இடர்பாடுகளால் காலப்போக்கில் முற்றிலுமாக சிதிலமடைந்தது. இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர்.

தொடர்ந்து கோயிலை பழைமை மாறாமல் புதிதாக அமைக்க மயிலாடுதுறை மண்டல அளவிலான வல்லுநர் குழு, சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படும் மாநில அளவிலான வல்லுனர் குழுவிற்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, கோயிலை ஆய்வுசெய்த அக்குழுவினர் அகழாய்வு செய்து கோயிலை பழைமை மாறாமல் புணரமைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்துசமய அறநிலையத்துறை தொல்லியல் துறை ஆலோசகர் மதிவாணன் வழிகாட்டுதல்படி, ஆய்வாளர் ஹரிசங்கரன் மேற்பார்வையில் அகழாய்வு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கோயிலின் சுவாமி, அம்பாள் சன்னதிகளின் பழைய கட்டுமான அடித்தளம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அகழ்வாய்வின்போது 11 கிராம் எடையுள்ள ஆபரணமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறிந்த இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம் கோயிலுக்கு சென்று கண்டுபிடிக்கப்பட்ட அடித்தளம் மற்றும் ஆபரணத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அகழாய்வு பணி முழு வீச்சில் நடத்தப்பட்டு கோயிலின் முழுமையான அடித்தளம் கண்டுபிடிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுடன் கோயில் பழைமை மாறாமல் புனரமைக்கப்படும் என தெரிவித்தார் இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story