ஏலச்சீட்டு நிறுவனம் மீது பொய் புகார் : மனு தாக்கல்

ஏலச்சீட்டு நிறுவனத்தின் மீது பொய்யான புகார் அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்த சிட்பன்ட் நிறுவனத்தினர்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தரகம்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு சிவம் சிட்பன்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தில் ஐம்பதாயிரம், ஒரு லட்சம், 5 லட்சம், 10 லட்சம் என ஏல சீட்டு நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் தற்போது புதிதாக துவக்கி 10 மாதங்களே ஆகி உள்ள நிலையில். இந்த நிறுவனத்தில் தரகம்பட்டி அருகே உள்ள சேர்வைக்காரன் பட்டியைச் சேர்ந்த டேனியல் பிரசாத் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் 5 லட்ச ரூபாய் ஏல சீட்டு போட்டு இருந்தனர். மாதமாதம் இதற்கு முறைப்படி குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்த வேண்டும்.

ஆனால், கிருஷ்ணவேணி முறையாக பணம் செலுத்தாமல் வந்துள்ளார். இதனிடைய அக்டோபர் 20ஆம் தேதி பத்தாவது ஏல சீட்டு நடந்தது. அப்போது தனக்கு பணம் வேண்டும் என அவர் கேட்டிருந்தார். கம்பெனி விதிகளின்படி முறையாக பணம் செலுத்தியவருக்கு சீட்டு வழங்கப்படும் என ஏற்கனவே அவருக்கு தெரியப்படுத்தி இருந்த நிலையில், இவர் முறையாக பணம் செலுத்தாமல் இருந்ததால், ஏலச்சீட்டை மற்றொருவர் எடுத்துவிட்டார்.

இதனால் கோபமடைந்த கிருஷ்ணவேணி மற்றும் அவரது கணவர் டேனியல் பிரசாத் மற்றும் சில அடியாட்களுடன் மறுநாள் இந்த நிறுவனத்திற்கு சென்று பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும்,இது தொடர்பாக பாலவிடுதி காவல் நிலையத்தில் பொய்யான காரணங்களை கூறி புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சிவம் ஏல சீட்டு நிறுவனத்தினர் காவல்துறையினரிடம் முறையாக பதில் அளித்ததோடு, கிருஷ்ணவேணி முறையற்ற முறையில் நடந்து கொண்டார் என்ற ஆதாரங்களை சமர்ப்பித்தனர். இதனால்,மேலும் கோபமடைந்த கிருஷ்ணவேணி கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் இந்த நிறுவனத்தை பற்றி தகாத தகவல்களை, உண்மைக்கு புறம்பாக ஆள் வைத்து வெளியிட்டுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிவம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தினர் இன்று கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட கிருஷ்ணவேணி மற்றும் அவரது கணவர் அவருடன் வந்து அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். மேலும், இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் அரசு செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, முறையாக நடக்கும் இந்த நிறுவனம் குறித்து தவறான நோக்கத்தோடு பொய்யான செய்திகளை, சில நபர்கள் துணையோடு வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த நிறுவனம் அவருக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார். நிறுவனத்தின் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாகவும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்ட கணவன் மனைவி உள்ளிட்ட அடியாட்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து இன்று மனு அளித்ததாக தெரிவித்தார்.

Tags

Next Story