கள்ளச்சாராயம் குடித்தவர் பலி - பொதுமக்கள் மறியல் போராட்டம்

கள்ளச்சாராயம் குடித்தவர் பலி - பொதுமக்கள் மறியல் போராட்டம்

போலீசார் பேச்சு வார்த்தை 

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராயம் தொடர்ந்து குடித்ததால் ஒருவர் உயிரிழந்த நிலையில், கள்ள சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரிபொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே கடுவங்குடி பகுதியில் பல நாட்களாக சாராய விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் காவல் துறை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்த வாரம் சிவன் கோயில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் பாலாஜி (32) தொடர்ச்சியாக ஙள்ளச்சாராயம் அருந்தி வந்துள்ளார். பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் 23-ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் தான் தங்கள் மகன் உயிரிழந்ததாக கூறி ஏராளமான பெண்கள் மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் பிரதான சாலையில் கடுவங்குடி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்கள் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் இரு பெண்களை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். பின்னர் தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story