இரவில் ஜொலித்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் பின் பொறுப்பேற்ற திமுக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ.114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் ஏழு மாடி கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்து இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் 3 மாவட்டத்தை சேர்ந்த 12,653 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். மொத்தம் ரூ.656.44கோடி மதிப்பிலான திட்டங்கள் செயலாக்கப்படுகின்றன. முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சி மண;டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உள்ளிட்ட 6 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் 8 ஏடிஎஸ்பிக்கள், மற்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் திருச்சி, புதுக்கோட்டை கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 1745 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் வருகையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. வாழைமரங்கள் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் மின்னொளியில் ஜொலிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டு வருகின்றனர். .
