மீன்பிடி கலன்கள் அனைத்தும் இருவேறு தேதிகளில் ஆய்வு -மாவட்ட ஆட்சியர்

பைல் படம்
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கான அறிவிப்பு தமிழ்நாடு கடல்; மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம்-1983-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி கலன்கள் அனைத்தும் வரும் 28.05.2024 அன்றும் மற்றும் நாட்டுப்படகுகள் 13.06.2024 அன்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட உள்ளது.
மேலும் ஆய்வு செய்யப்படும் நாளில் படகு உரிமையாளர்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, துறை மூலம் வழங்கப்பட்ட தொலை தொடர்பு கருவிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திடுமாறும், ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவிற்கு அனைத்து விவரங்களையும் அளித்திடவும் அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக தெரிவிக்கப்பட்ட வர்ணம் பூசி ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். மேலும் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் வாங்கும் படகுகள் நேரடி ஆய்வின் போது ஆய்விற்குட்படுத்தவில்லையெனில் அப்படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன் அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாக் கருதி அப்படகுகளின் பதிவு சான்றினை உரிய விசாரணைக்கு பின் இரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆய்வு நாள் அன்று படகினை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது என்ற விவரம் அனைத்து படகு உரிமையாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.