போதையில் அரசு பேருந்தை உதைத்தவரின் கால் முறிவு

போதையில்  அரசு பேருந்தை உதைத்தவரின் கால் முறிவு

 அட்ராசிட்டியில் ஈடுபட்ட போதை ஆசாமி 

மது போதையில் பாட்டு கேட்டுக் கொண்டே நடு ரோட்டில் ஆடி அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர் அரசுப் பேருந்தை எட்டி உதைத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டதால் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கலைஞர் நகர் என்ற இடத்தில் கோயில் திருவிழாவுக்கு மைக் செட் கட்டப்பட்டுள்ளது. இதில், ஒளிபரப்பப்பட்ட பக்தி பாடலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி வந்தது போல் நடு ரோட்டில் ஆடி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினார். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக அவர் சாலையில் நின்றவாறு கடந்து சென்ற வாகனங்களை நிறுத்தி, வாகனங்களை கையால் தாக்கியும், காரின் மீது காலை தூக்கி வைத்தும் அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.

குடிபோதை ஆசாமியின் செயலை பலர் பல்லைக் கடித்தவாறு பொறுத்துக்கொண்டு கடந்து சென்றனர். இறுதியாக அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை வழிமறித்த இளைஞர் சுமார் 5 நிமிடங்கள் அந்த பேருந்தை கடந்து செல்ல முடியாதவாறு தடுத்து நிறுத்தியதுடன், பேருந்தின் கண்ணாடியை கையால் தாக்கியும், பேருந்தை எட்டி உதைத்தும் அடாவடியில் ஈடுபட்டார். பேருந்து ஓட்டுநரும் செய்வதறியாது அதே இடத்தில் பேருந்தை நிறுத்தியிருந்தார். போதை தலைக்கேறிய இளைஞர் பேருந்தை எட்டி உதைத்ததில் அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் சாலையிலேயே நிலை தடுமாறி விழுந்து துடிதுடித்தார். இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags

Next Story