மூன்றாவது நாளாக ஆட்டம் காட்டும் சிறுத்தை புலி

மயிலாடுதுறையில் சிறுத்தை புலி நடமாடும் பகுதி மாறியுள்ளதால் வனத்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் கடித்து குதறப்பட்ட ஆடு கால்நடை மருத்துவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகரில் கடந்த 2ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட கூரைநாடு பகுதியில் வனத்துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறுத்தை பிடிபடாத நிலையில் சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் கருவை காடு பகுதிக்கு இடம்பெயர்ந்தது தெரியவந்தது. சிறுத்தை பகலில் ஓய்வெடுத்து இரவில் வேட்டையாடும் இனம் என்பதால் அதனை மாலை நேரத்தில் பிடிப்பதற்கு வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

திருச்சி மண்டல தலைமை வன அலுவலர் சதீஷ் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் டோமர் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர் தொடர்ந்து சிறுத்தை பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மயிலாடுதுறைக்கு வருகை தந்து நேற்று இரவு சென்சார் பொருத்திய 10கேமராக்களை பொருத்தினர். கூண்டு வைத்து பிடிப்பதற்காக லாரியில் கொண்டுவரப்பட்ட 3 கூண்டுகளில் இறைச்சியை வைத்து சம்பந்தப்பட்ட கருவை காட்டில் வைத்தனர். இதன் காரணமாக இரண்டு நாட்களாக 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிறுத்தை நடமாடும் பகுதியாக கருதப்படும் இடங்களில் உள்ள ஒன்பது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இன்று காலை மூன்று கூண்டுகளிலும் சிறுத்தை சிக்கவில்லை. வனத்துறை அதிகாரிகள் 10 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சித்தர்காடு தண்டபாணி செட்டி தெரு பகுதியில் காவிரி கரை அருகில் ஆடு ஒன்று கழுத்துப் பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது. சிறுத்தை கடித்து குதறிவிட்டதாக அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இரவு 11 மணி அளவில் அரை மணி நேரம் நாய்கள் குறைத்ததாகவும் காலையில் எழுந்து பார்க்கும் போது ஆடு இறந்து கிடப்பதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். சிறுத்தை தான் கடித்ததா என்று மருத்துவக் குழுவினர் ஆட்டை பரிசோதனை செய்த பின்னரே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்று உறுதிப்படுத்த முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story