மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி-மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்!

பொள்ளாச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கு விரைந்து தீர்வு காண மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தமிழக அரசு தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோட்டூர் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்று காலை துவங்கிய இந்த முகாமை கோட்டூர் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி மூலம் புதிய மின்சாரத்துறை மற்றும் எரிசக்தி துறை சார்பாக மின் இணைப்பு வழங்குதல், மின்இணைப்பு குறித்த சேவைகள், வருவாய் துறை சம்பந்தப்பட்ட பட்டா மாறுதல், மற்றும் பல்வேறு சான்றிதழ்கள்-குடிநீர் வழங்கல் துறை சார்பாக சொத்துவரி, தண்ணீர் வரி திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சேவைகள் - காவல்துறை சார்பாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள் - மாற்றுத்திறனாளிகள் துறை சார்பாக பராமரிப்பு உதவித்தொகை, உபகரணங்கள் பெறுதல்,கடன் உதவி தொகை - வீட்டு வசதி துறை சார்பாக நகர்ப்புற வாழ்விடத்தில் வீடு அமைத்தல்,மனை வரன்முறை மற்றும் சமூக நலம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பெண் கல்வித் திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை குறித்த மனுக்கள் பெறப்பட்டு அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி உரிய அதிகாரிகளிடம் அளித்து வருகின்றனர்.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story