பள்ளி செல்லா குழந்தைகளே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்- ஆட்சியர்

பள்ளி செல்லா குழந்தைகளே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்- ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் தங்கவேல்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும் போது, பள்ளி அளவிலான முதல் மட்ட குழு சிறப்பாக பணி மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு போதுமான அளவுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் முதன்மை கல்வி அலுவலர்கள் மேலாய்வு மேற்கொள்ள வேண்டும். வாரந்தோறும் பள்ளியின் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும். 15 நாட்களுக்கு மேல் வருகை தராத இடைநிற்றல் ஆக வாய்ப்புள்ள குழந்தைகளை இடைநிற்றலின்றி மீண்டும் பள்ளிக்கு வருகை புரிவதை வட்டார மற்றும் பள்ளி அளவிலான மூன்றடுக்கு குழு உறுப்பினர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல் ஏற்படுத்த வேண்டும். குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன், குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் சொக்கலிங்கம், வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 17 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story