இருசக்கர வாகன திருட்டு -காவல்துறை அதிரடி நடவடிக்கை

இருசக்கர வாகன திருட்டு -காவல்துறை அதிரடி நடவடிக்கை
இருசக்கர வாகனம் திருட்டு
கரூர் மாவட்டம், காளியப்பனூர் அருகே இருசக்கர வாகனத்தை களவாடிய நபர் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் எல்லைக்குட்பட்ட, காளியப்பனுர் பகுதியில் உள்ள பேங்க் சுப்ரமணியம் லாட்ஜ்-ல் வசித்து வந்தவர் ஜெயக்குமார் வயது 65. இவர் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அவருக்கு சொந்தமான டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர் வாகனத்தை, லாட்ஜின் முன்பாக நிறுத்திவிட்டு, தூங்க சென்று விட்டார். மீண்டும் மறுநாள் காலை 22ஆம் தேதி 6:30 மணி அளவில் எழுந்து பார்த்த போது அவரது டூவீலர் காணாதது கண்டு திடுக்கிட்டார்.

மேலும், தனது டூவீலர் குறித்து லாட்ஜில் தங்கி உள்ளவர்களிடமும் லாட்ஜ் அருகாமையில் உள்ள கட்டிடங்களில் பணியாற்றுபவர்களிடம் விசாரித்து பார்த்துள்ளார். ஆனால், அது குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறாததால், இது குறித்து தாந்தோணி மலை காவல் நிலையத்தில் தனது டூவீலரை காணவில்லை என புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டபோது, இந்த டூவீலரை திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, கரிக்காலி அருகே உள்ள பிரபாகவுண்டன்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் உமாமகேஸ்வரன் வயது 40 என்பவர் களவாடியது தெரியவந்தது. உடனடியாக உமா மகேஸ்வரனை கைது செய்து, களவாடிய அந்த டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் வாகனத்தை மீட்டனர்.

மேலும், உமாமகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். சிறையில் அடைக்கப்பட்ட உமாமகேஸ்வரன் மீது ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு வழக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story