மயிலாடுதுறை அருகே ஆதிகால பெண்தெய்வ கற்சிலை கண்டெடுப்பு

மயிலாடுதுறை அருகே ஆதிகால பெண்தெய்வ கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கோனேரிராஜபுரத்தில் வித்தியாசமான கற்சிலை ஒன்று கிடைத்துள்ளது என்று கும்பகோணத்தை சேர்ந்த கோபிநாத் குத்தாலம் வட்டாட்சியர் சித்ராவிற்கு தகவல் தெரிவித்தார். அரசு அதிகாரிகள் சென்று சிலையைக் கைப்பற்றி குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை தொல்லியல் அலுவலர் வசந்த்குமார் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கற்சிலை 3 அடி உயரமும் 2 அடி அகலமும் 1.1/2 அடி தடிமனும் கொண்ட தவ்வையின் சிலை என்றும் தவ்வையின் இரண்டு பக்கத்திலும் மாந்தன், மாந்தி என்ற பிள்ளைகள் காக்கை கொடியுடன் காணப்பட்டது 100கி.கி எடைகொண்டதாகும். இந்த சிலை 10ஆம் நூற்றாண்டை சார்ந்தது என்பதால். இந்தசிலையை தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையில் தொல்பொருள் பாதுகாப்பு பிரிவில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆதி காலத்தில் தமிழர்கள் இயற்கை வழிபாட்டில் ஈடுபட்டுவந்தனர், கொற்றவையை பெண்தெய்வமாக வழிபட்டுள்ளனர், இந்த தவ்வை வழிபாடு சிலையாகவும் கோவிலாகவும் எழுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த தவ்வை சிலை வயல்காட்டுப்பகுதிலேயே காணப்பட்டது. நெல்லிற்கு உரமாக தவ்வையும் நெற்கதிர்களின் அடையாளம் திருமகளாக கருதப்பட்டது.

13ஆம் நூற்றாண்டுவரை தவ்வை வழிபாடு தமிழர்களிடம் தொன்றுதொட்டு இருந்துவந்துள்ளது. தமிழர்களின் இயற்கை வழிபாடு வடவர்களின் வரவால் மெல்ல மாறியது.காலப்போக்கில் தவ்வை என்பவர் மூத்ததேவியாகி, இறுதியில் மூதேவியாகவே ஒதுக்கப்பட்டது. மூதேவி சீதேவி கதையை திருவள்ளுவரே தமது 167வது குறளில் வைத்துள்ளார், தமிழர்களின் பெண்தெய்வம் மெல்ல மெல்ல துடைத்தெறியப்பட்டது என தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Tags

Next Story