டெல்டாவில் புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டுவதில்லை - ஓஎன்ஜிசி

டெல்டாவில் புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டுவதில்லை - ஓஎன்ஜிசி

செய்தியாளர் சந்திப்பு 

 மயிலாடுதுறை பகுதியில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் மராமத்து பணி குறித்த தவறான புரிதலால் சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர் என ஓஎன்ஜிசி நிறுவனம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறையில் ஒஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவரும், காவிரி அசட்ஸ் குழு பொது மேலாளருமான பி.என்.மாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் 8 எண்ணெய் கிணறுகள் மராமத்து பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இந்த மராமத்து பணி குறித்த தவறான புரிதலால் சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். எண்ணெய் கிணறுகள் அனுமதி துறப்பண பணிக்காக மட்டும்தான். தோண்டிய பிறகு கிணறு ஒரு இன்ஸ்டாலேஷனுடன் இணைக்கப்பட்ட பிறகு அனுமதி புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. துரப்பன பணியின்போது இடத்தில் எண்ணெய்-எரிவாயு இல்லை என்பது உறுதியானபோது அப்போதே அந்த நிலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் 2020-ஆம் ஆண்டு பாதுகாகப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு புதிய இடங்களிலோ, பழைய எண்ணெய் கிணறுகள் வளாகங்களிலோ புதிய துரப்பண திட்டங்கள் நடைபெறவில்லை. கிணறுகளின் மராமத்து பணி எந்த வகையிலும் சட்ட விரோதமானது அல்ல. மராமத்து என்ற பெயரில் ஓசைபடாமல் பெரிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் கிடையாது. மராமத்து செய்ய உள்ள 8 எண்ணெய் கிணறுகள் குத்தாலம் சேகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் அவற்றின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. மராமத்து பணிகள் சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியோருக்கு தெரிவித்துதான் பணிகள் நடந்து வருகிறது.அதனால் குத்தாலம் பகுதியில் உள்ள 8 எண்ணெய் கிணறுகளும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் மராமத்து பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றார். அப்போது, மனிதவள மேம்பாட்டு பிரிவு தலைவர் கணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர். (பழைய கிணற்றில் மராமத்து பணி என்ற பெயரில் புதிய கிணறுகள் தோண்டப்படுகிறது என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்)

Tags

Next Story