லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சிக்கிய ஆர்.டி.ஓ, வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட்
![லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சிக்கிய ஆர்.டி.ஓ, வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட் லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சிக்கிய ஆர்.டி.ஓ, வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட்](https://king24x7.com/h-upload/2023/11/22/309483-image3a1000199525.webp)
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம்
பொள்ளாச்சி:கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் அமைந்துள்ளது வட்டார போக்குவரத்து அலுவலகம்.இந்த அலுவலகத்தில் முறைகேடுகள் மற்றும் லஞ்சம் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது.
கோவை மாவட்ட ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் லதா மற்றும் ஷீலா தலைமையிலான அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் இடைத்தரகர்கள் உள்ளிட்ட நபர்கள் அடிக்கடி வந்து செல்வது உறுதி செய்யப்பட்டது.இதை அடுத்து அதிரடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குள் நுழைந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டபோது கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி இவர்களுக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் மோகன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் முருகானந்தம் மற்றும் செல்வி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் விதமாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர்.தற்போது பொள்ளாச்சி ஆர்டிஓ தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் பொறுப்பு அதிகாரியாக உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.