கடும் வறட்சி : பொள்ளாச்சியில் இளநீர் ஏற்றுமதி குறைவு

கடும் வறட்சியால் பொள்ளாச்சியில் இளநீர் உற்பத்தி குறைந்துள்ளது. நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேல் ஏற்றுமதி செய்யப்பட்ட இளநீர் தற்போது வெறும் 40 ஆயிரம் அளவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்யபடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் தென்னை நகரம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சியில் இருந்து இளநீர் மற்றும் தேங்காய் தமிழகத்தில் உள்ள திருப்பூர்,ஈரோடு,சேலம், ஓசூர், உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் நாளொன்றுக்கு சுமார் இரண்டு லட்சத்திற்கு மேல் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தற்போது கடும் வறட்சி நிலவி வரும் சூழலில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து வெப்பம் அதிகரிப்பு போன்ற காரணத்தால் இளநீர் உற்பத்தி குறைந்து, ஒரு தென்னை மரத்தில் 30 இளநீர் உற்பத்தியான நிலையில் தற்போது வெறும் எட்டு மட்டுமே காய்த்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இரண்டு லட்சம் இளநீர் வரை ஏற்றுமதியான சூழலில் தற்போது நான்கில் ஒரு பங்கு 40,000 இளநீர் மட்டுமே ஏற்றுமதியாவதாகவும், பொள்ளாச்சி இளநீர் என்றாலே அளவில் பெரியது சுவையில் சிறந்தவை என பெயர் போன பொள்ளாச்சி இளநீர் தற்போது அளவும் குறைத்து தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது.

பச்சை இளநீர், சிவப்பு இளநீர் 33 ரூபாய்க்கும் தற்போது ஏற்றுமதி ஆவதாகவும் ,வரத்து குறைவு காரணமாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் 70 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவதாகவும், மேலும் விலை அதிகரிக்க கூடும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story