பிலிம் சிட்டி உரிமையாளர், ஈநாடு குழும அதிபர் ராமோஜி ராவ் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்

ராமோஜி ராவ்
ராமோஜி ஃபிலிம் சிட்டி உரிமையாளர், ஈ-நாடு குழும அதிபர்,தொழிலதிபர் ராமோஜி ராவ் உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87.
ஈ-நாடு பத்திரிகை நிறுவனரும், ராமோஜி ராவ் குழும நிறுவனங்களின் தலைவருமான ராமோஜி ராவ், உடல்நிலை பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென இதய பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமாஜி ராவ் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
ராமோஜி ராவ் மறைவுக்கு திரை, அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராமோஜி ராவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராமோஜிராவின் பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.