மணிப்பூரில் ஊரடங்கு அமல்; இணையதளம் முடக்கம்!!

மணிப்பூரில் அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் செப்.15 ஆம் தேதிவரை இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-10 13:04 GMT

manipur protest

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்களுக்கிடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.16 மாதங்களாகியும் எந்த தீர்வும் எட்டப்படாததால் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். ராக்கெட் டிரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் மூலம் அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே நேற்று தலைநகர் இம்பாலில் அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி பலத்தைப் பிரயோகித்து போராட்டத்தை ஒடுக்கும் பணியில் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் பாதுகாப்புப்படை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்க இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் வலுவடையாமல் இருக்க வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை அடுத்த 5 நாட்களுக்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. தலைமை காவல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News