அமாவாசை, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு .
சேலம் கோட்டத்தில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது;
சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் முக்கிய பண்டிகை நாட்களில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதிநாட்கள், நாளை (சனிக்கிழமை) அமாவாசை, 30-ந் தேதி யுகாதி பண்டிகை, 31-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 1-ந் தேதி வரை சேலம் கோட்டம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் முக்கிய ஊர்களுக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூர், மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சீபுரம், பெங்களூருவுக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, காஞ்சீபுரத்துக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், ஓசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும், நாமக்கல், ஆத்தூர், செந்தாரப்பட்டி, ராசிபுரத்தில் இருந்து சென்னைக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் அமாவாசையை முன்னிட்டு சேலம் மற்றும் தர்மபுரியில் இருந்து மேட்டூர், மாதேஸ்வரன் மலைக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தர் கோவிலுக்கும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். எனவே, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.