பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக் குழுவில் தீர்மானம்;

Update: 2025-07-14 06:53 GMT
நாகை அரசு ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் நாகை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ந.செல்வம் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் ந.பாலசுப்பிரமணியன், மாநில ஊடக பிரிவு செயலாளர் ச.சிவ வேலன், மாநில செயற்குழு உறுப்பினர் தி.திருமாவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரா.அரசமணி தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளராக கீழையூர் ஒன்றிய பட்டதாரி ஆசிரியர் கோ.மணிமாறன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவோடு, பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் கலந்தாய்வினை நேர்மையான முறையில் உடனடியாக நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் பணியாற்றுகிற அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முன்னதாக, நாகை ஒன்றிய பொறுப்பாளர் சிவா அசோக் வரவேற்றார். முடிவில், மாவட்ட பொருளாளர் சு.அறிவொளி நன்றி கூறினார்.

Similar News