சேலம் சூரமங்கலம் முல்லைநகரை சேர்ந்தவர் செந்தில்ராகவன் (வயது 41). டாக்டரான இவர், குரங்குச்சாவடி ஸ்ரீநகர் காலனியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி இரவு வழக்கம்போல் அவர் கிளினிக்கை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கிளினிக்கின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் செந்தில்ராகவன் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.