ஜல்லிக்கட்டு போட்டிக்கு 12,176 காளைகள் பதிவு - அமைச்சர் தகவல்

மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,176 காளைகள் மற்றும் 4514 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Update: 2024-01-12 01:32 GMT

அமைச்சர் மூர்த்தி 

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி பேசும்போது ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறும் அதேபோல் ஜனவரி 16ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூர் கிராம பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் மொத்தம் 12,176 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4514 மாடுபிடி வீரர்கள் அவனியாபுரம், பாலமேடு,அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.

இதுவரை பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து இரண்டு முறை தவறாக பதிவாகி விடக்கூடாது மற்றும் ஆதார் அட்டைகளை டோக்கன்களில் தவறாக பயன்படுத்திவிட கூடாது என்பதற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காளைகளின் உரிமையாளர்கள் பெயரை வாசிக்கும் போது ஜாதிப் பெயர்கள் இந்த முறை தவிர்க்கப்படும். களம் காணும் காளைகள் வாடிவாசலில் இருந்து சேகரிக்கப்படும் இடத்திற்கு பாதுகாப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதாவது அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படும். அதேபோல் அவனியாபுரம், பாலமேடு,அலங்காநல்லூர் ஆகிய 3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படும். இந்த ஆண்டு மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்கும் காளைகளுக்கு கொம்புகளில் ரப்பர் குப்பி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் விலங்குகள் நல துறையும் ஆலோசித்து வருகிறது.

புதிதாக அலங்காநல்லூர் கீழக்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும்போது அந்த தேதி முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கும் ஆன்லைன் முன்பதிவு நடைபெறும். எத்தனை நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் மாடுபிடி வீரர்களுக்கும் காளையின் உரிமையாளர்களுக்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரப்படும். கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்ன பரிசுகள் வழங்கப்படும் என்பது அப்போது முடிவெடுக்கப்படும்.

கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது பொதுமக்கள் அனைவரும் வருவதற்கு பேருந்து வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை செய்து ஏற்பாடு செய்து தருவார். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசுகள் காருக்கு பதிலாக டிராக்டர் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மூர்த்தி, சிறப்பாக மாடு பிடிப்பவர் முதல் பரிசாக கார் வேண்டும் என்று சொல்கிறார். மாட்டின் உரிமையாளரும் கார் வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்திற்கு ஏற்பவே பரிசுகள் வழங்கப்படுகிறது. வேண்டுமென்றால் அன்புமணி ராமதாஸ் டிராக்டர் வாங்கி கொடுத்தால் அவர் பேரிலேயே பரிசை கொடுக்கிறோம் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News