சசிகலா, ஓ.பி.எஸ்.சை சேர்க்க எடப்பாடி மறுப்பு;
சசிகலா, ஓ.பி.எஸ்.சை சேர்க்க எடப்பாடி மறுப்பு;;
சேலம்: ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே முடியாது என டெல்லியில் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வரும் கழகத்தை உடைக்க மகன் தயாராக இருக்கிறார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் சேர தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானவுடன் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர் மீட்பு கழகம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். டி.டி.வி தினகரனோ, அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் சசிகலாவோ அதிமுகவை ஒருங்கிணைப்பேன், நான் தான் அதிமுக பொதுச்செயலாளர் என அவரது ஆதரவாளர்களிடம் கூறிவருகிறார்.
இவர்கள் 3 பேரும் எப்படியாவது அதிமுகவில் சேர்ந்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்த்து விடுவதாக பாஜக உறுதி கூறியது. இதனை நம்பிய ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி, தேனியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இந்நிலையில், அதிமுக கட்சி விவகாரத்தில் இனிமேல் தலையிட மாட்டோம் எனக் கூறி பாஜ ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லண்டன் வழக்கு, இரட்டை இலை சின்னத்திற்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் தினகரன், பாஜக மிரட்டலுக்கு பயந்துபோய் தற்போது வாய் திறக்காமல் இருந்து வருகிறார்.