ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-20 01:46 GMT

நீரில் மூழ்கி பலி

அரியலூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாபு மகன் கோகுல்(22). இவர், அரியலூர் தேரடி பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தலையொட்டி வாக்கு செலுத்திவிட்டு நண்பர்களுடன் திருமானூர் கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆற்றில் தண்ணீர் செல்லாத நிலையில், அரியலூர் - தஞ்சாவூர் பாலம் அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் குளித்துள்ளனர்.

அப்போது, கோகுல் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. இதை கண்ட உடன் வந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர்கள், தங்களிடமிருந்த வலைகளை வீசி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு கோகுல் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு வந்த அரியலூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் திருமானூர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதே இடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சாவூரிலிருந்து குளிக்க வந்த 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News